Tuesday, June 26, 2018

உப்பு

மருத்துவக் குணங்கள்:     
  1. தண்ணீரிலிருந்துதான் சுவை தோன்றுகிறது.​ அது முதலில் தனிப்பட்ட முறையில் அறியப்படாத ஒரு பொருள்.​ வருடம் என்ற காலம்,​​ ஆறு பருவங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதாலும் பஞ்ச மஹா பூதங்களான நிலம்,​​ நீர்,​​ நெருப்பு,​​ வாயு,​​ ஆகாயம் இவற்றின் குணங்களின் ஏற்றத் தாழ்வின் கலப்பினாலும் சுவை என்பது இனிப்பு முதலான ஆறு தனித்த தனிச் சுவையாகத் தோற்றம் அடைகிறது.
  2.  நீர் மற்றும் நெருப்பின் அதிகச் சேர்க்கையினால் ஏற்படும் சுவை உப்பு.​ உப்புச் சுவை உமிழ் நீரை பெருகச் செய்கிறது.​ உணவிற்குச் சுவையூட்டுகிறது.​ அதிக சேர்க்கை தொண்டையையும் தாடைகளையும் எரிக்கிறது.​ உங்களைப் பொறுத்தவரை உப்புச் சுவையிலுள்ள நீர் மற்றும் நெருப்பின் தேவை,​​ உடலில் ஏதோ ஒரு பகுதியின் தேய்மானத்தை ஈடுகட்டுவதற்காக,​​ அதன் மீது நாட்டத்தை ஏற்படுத்துகிறது.
  3. உப்புச் சரியான அளவில் சேர்க்கும் போது,​​ பசித்தீயைத் தூண்டுகிறது.​ நாக்கிலுள்ள ருசி கோளங்களில் படிந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தி சுவையை உணரும்படி செய்கிறது.​ உண்ட உணவைச் சீரணிக்க உதவுகிறது.​ வயிற்றில் ஈரப்பசையை ஏற்படுத்துகிறது.​ குடல் முழுவதும் எண்ணெய்ப் பசையை ஏற்படுத்தி குடலின் இயற்கையான அசைவுகளுக்கு உதவுகிறது.
  4. வியர்வை கோளங்களைச் சுறுசுறுப்புடன் இயங்கச் செய்கிறது.​ குடலில் சேர்ந்துள்ள இறுகிய மலத்தை உடைத்து வெளியேற்றுகிறது.​ உடல் முழுவதும் விரைவில் பரவிவிடும் திறன் உடையது.​ உடலிலுள்ள எண்ணற்ற ஓட்டைகளைச் சுத்தப்படுத்திவிடும்.​ ஊடுருவும் தன்மையும் சூடான வீரியமும் உள்ள உப்புச் சுவையின் நன்மைகளை நீங்கள் அடைந்தாலும் அதன் அதிக அளவிலுள்ள சேர்க்கையினால் ஏற்படும் கெடுதிகளில்-​ தலை வழுக்கை,​​ நரை,​​ நாவறட்சி,​​ உடல் எரிச்சல்,​​ மயக்கம்,​​ தோலின் மேல் பரவும் நோய்கள்,​​ வீக்கம்,​​ இசிவு எனும் கை,கால்களில் உண்டாகும் வலிப்பு நோய்,​​ பித்தம்,​​ ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் ரத்த பித்த நோய் போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.
  5. உணவில் நாம் பொதுவாக கடலுப்பைத்தான் பயன்படுத்துகிறோம்.​ பொதுவாக உப்பு என்றால் இந்துப்பையே பயன்படுத்த வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.​ ஆனால் இன்று அது பயன்பாட்டில் இல்லை.​ இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.​ ஆண்மையை வளர்ப்பது.​ மனதிற்கு நல்லது.​ வாதம்,​​ பித்தம்,​​ கபம் மூன்றையும் போக்கவல்லது.​ இலேசானது,​​ சிறிதளவு உஷ்ணமுள்ளது.​ நாட்டு மருந்துக் கடைகளில் இந்துப்பு கிடைக்கிறது.
  6. அதனால் உப்பின் மீதுள்ள மோகத்தை நீங்கள் முடிந்தவரை குறைத்துக் கொள்வது நல்லது.​ அப்படி முடியாமல் போனால் உப்பு வகைகளில் சிறந்ததான இந்துப்பை நீங்கள் பயன்படுத்தலாம்.​ அயோடின் சேர்க்கை தேவை என்று கூறி அதை உப்பில் சேர்த்து விற்பதால் அதன் பயன்பாட்டையும் நாம் உதாசீனப்படுத்த இயலாது என்பதால் நீங்கள் அயோடின் கலந்த உப்பைச் சமையலுக்கும் சாப்பிடும்போது மேலும் உப்பு வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்,​​ இந்துப்பையும் சேர்க்கலாம்.
  7. கடலுப்பு சீரண இறுதியில் இனிப்பாக மாறிவிடும்.​ ஆனாலும் அது விரைவில் செரிப்பதில்லை.​ அதன் அதிக அளவிலான சேர்க்கை கபம் எனும் தோஷத்தைத் தூண்டுகிறது.​ இந்துப்பு இதற்கு எதிர்மறையான குணங்களைக் கொண்டுள்ளதால் கடலுப்பினால் ஏற்படும் கெடுதல்களைக் கூட இந்துப்பு குறைத்து விடக்கூடும்.​ இதைக் ​ கருத்தில் கொண்டுதான் சில ஆயுர்வேத மருந்துகளாகிய அஷ்ட சூரணம்,​​ ஹிங்குவசாதி,​​ வைச்வாநரம் போன்றவற்றில் இந்துப்பு சேர்க்கப்படுகிறது.

No comments: